இறந்த கணவர் உடலுக்கு முத்தமிட்ட மனைவி; அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்

அவரது உடல் வைக்கப்பட்ட பெட்டியை மூடி தேவாலயம் கொண்டு செல்லும் பணிகள் தொடங்கின.


இறந்த கணவர் உடலுக்கு முத்தமிட்ட மனைவி
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில் இறந்த கணவர் உடலுக்கு முத்தமிட்ட மனைவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வாழ்வில் மட்டுமல்ல... சாவிலும் இணைபிரியாத தம்பதிகளாகும் பாக்கியம் ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும். அப்படி ஒரு வாய்ப்பு கேரள பெண் ஒருவருக்கு கிடைத்துள்ளது. இறந்த கணவர் உடலுக்கு முத்தமிட்ட அவர் அப்படியே மயங்கி விழுந்து உயிரை விட உறவினர்கள் சோக கடலில் மூழ்கினர்.

கேரள மாநிலம் பாலாவில் உள்ள புதன்பள்ளிக்குனனு வாழையிலை பகுதியை சேர்ந்தவர் குரியன் ஜோசப் (வயது 73). வியாபாரியான இவர் கேரள காங்கிரசின் வழிநடத்தல் குழு உறுப்பினராக செயல்பட்டு வந்தார். இவரது மனைவி ஷெர்லி (71). கடந்த 15-ந் தேதி வயது முதிர்வு காரணமாக குரியன் ஜோசப் இறந்தார். இது ஷெர்லியை மிகவும் பாதித்தது. இந்த நிலையில் நேற்று குரியனின் இறுதிச் சடங்குகள் வீட்டில் நடைபெற்றன.

தொடர்ந்து அவரது உடல் வைக்கப்பட்ட பெட்டியை மூடி தேவாலயம் கொண்டு செல்லும் பணிகள் தொடங்கின. அப்போது ஷெர்லி, கணவருக்கு இறுதி முத்தம் கொடுக்க குனிந்தார். அதன்பிறகு அவர் எழுந்திருக்கவே இல்லை. இதனை கவனித்த உறவினர்கள், அவரை தூக்க முயன்ற போது எந்த அசைவும் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு ஷெர்லி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த தகவல் குரியன்-ஷெர்லி தம்பதியரின் 3 மகள்கள் மற்றும் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து சாவிலும் இணைபிரியாத குரியன்-ஷெர்லியின் இறுதிச்சடங்குகள் இன்று நடைபெற்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com