

சண்டிகர்,
பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் பஞ்சாப் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியல் (மைக்ரோபயாலஜி) துறையில் ஜோதி (வயது 28) ஆராய்ச்சி படிப்பை படித்து வந்தார். அரியானாவின் ரிவாரி பகுதியை சேர்ந்த இவர் பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வந்தார்.
இந்நிலையில், மாணவி ஜோதி இன்று பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறையில் இருந்து விடுதிக்கு நடந்து சென்றுள்ளார். நேற்று இரவு பெய்த மழை காரணமாக பல்கலைக்கழக வளாகத்தில் வழக்கமான நடைபாதையில் தண்ணீர் தேங்கி இருந்துள்ளது.
இதனால், மாற்று வழியில் விடுதிக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது கல்லூரி வளாகத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை ஜோதி மிதித்துள்ளார். இதில் ஜோதி மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் அவர் படுகாயமடைந்த நிலையில் அவரை மீட்ட மாணவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு ஜோதியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவ,மாணவியர் பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.