

புதுடெல்லி,
கடந்த 2002-ம் ஆண்டு, குஜராத் கலவரத்தின்போது, பில்கிஸ் பனோ என்ற பெண், ஒரு கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். அவருடைய குடும்பத்தை சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில், 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில், கடமையை சரிவர செய்யாததாகவும், ஆதாரத்தை அழித்ததாகவும் 5 போலீசார், 2 டாக்டர் கள் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கில், கடந்த 2017-ம் ஆண்டு மே 4-ந் தேதி, 7 பேரும் குற்றவாளிகள் என்று குஜராத் ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
இருப்பினும், 7 பேர் மீதும் குஜராத் மாநில அரசு எவ்வித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்காததால், பில்கிஸ் பனோ, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு நேற்று இவ்வழக்கில் தீர்ப்பு அளித்தது. 5 போலீசார், 2 டாக்டர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை நிறைவேற்றுமாறு குஜராத் மாநில அரசுக்கு உத்தரவிட்டது. குஜராத் அரசு வழங்க முன்வந்த ரூ.5 லட்சம் இழப்பீட்டை பில்கிஸ் பனோ ஏற்க மறுத்தார். இழப்பீட்டு தொகையை அதிகரிக்க கோரிய அவரது மனு மீது ஏப்ரல் 23-ந் தேதி விசாரணை நடக்கும் என்று நீதிபதிகள் கூறினர்.