

லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் பந்தா மாவட்டத்தை சேர்ந்த இளைஞரும், அருகில் உள்ள சித்ரகூட் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்ணும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், தங்களின் காதல் விவகாரத்தை வீட்டில் கூறி சம்மதம் வாங்கிவிட்டு, விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் என இருவரும் முடிவு செய்துள்ளனர்.
இதன்படி இருவரும் தங்கள் வீட்டில் பேசியபோது, இந்த காதலுக்கு அவர்களின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த காதல் ஜோடி, யாருக்கும் தெரியாமல் தனியாக சந்தித்து பேசிக் கொண்டனர். அப்போது இருவரும் சேர்ந்து வாழ முடியாவிட்டால், சேர்ந்து உயிரை விட்டு விடலாம் என முடிவு செய்து விஷத்தை குடித்து உயிரை மாய்த்துக் கொண்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் உயிரிழந்த காதல் ஜோடியின் வீடுகளுக்குச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். உயிரிழந்த இருவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.