

புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்த அ.தி.மு.க.வைச் சேர்ந்த முகமது ஜான் மறைந்ததை தொடர்ந்து ஏற்பட்ட காலியிடம் மற்றும் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் ராஜினாமா செய்ததால் உருவான காலியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் தி.மு.க.வைச் சேர்ந்த எம்.எம்.அப்துல்லா, டாக்டர் கனிமொழி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து இவர்கள் 3 பேரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல்நாளான நேற்று மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு முன்னிலையில் எம்.பி.க்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
பொதுவாக பதவி ஏற்பு நிகழ்ச்சிகளின்போது பதவி ஏற்பவர்கள், இறைவன் பெயரால் அல்லது உளமாற என கூறி உறுதிமொழி ஏற்பது வழக்கம். ஆனால் நேற்று பதவி ஏற்றுக்கொண்ட தி.மு.க. எம்.பி.க்கள் 3 பேரும் விழுமிய முறைமையுடன் உறுதி ஏற்பதாக தெரிவித்தனர்.
இதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. லூய்சின்ஹோ பேரோ, காங்கிரஸ் எம்.பி. ரஜானி அசோக்ராவ் படேல் ஆகியோரும் பதவி ஏற்றுக்கொண்டனர்.