இன்று கூடுகிறது நாடாளுமன்றம்: முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இன்று கூடுகிறது நாடாளுமன்றம்: முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இத்தொடர், ஆகஸ்டு 21-ந் தேதி வரை ஒரு மாத காலத்துக்கு நடக்கிறது. காஷ்மீரில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு நடக்கும் முதலாவது கூட்டத்தொடர் என்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது.

அதைத்தொடர்ந்து நடந்த 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை, இந்தியா-பாகிஸ்தான் சண்டை, அதை நிறுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சொன்னது, பீகார் சட்டசபை தேர்தலையொட்டி நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என அடுத்தடுத்து பரபரப்பான சம்பவங்கள் நடந்துள்ளன.

'இந்தியா' கூட்டணி

இந்த பிரச்சினைகளை எழுப்பி, ஆளுங்கட்சிக்கு எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுக்கும் என்பதால், இந்த கூட்டத்தொடரில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமாக, ஒவ்வொரு கூட்டத்தொடருக்கு முன்பும் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்கள் எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தி அறிவுரை வழங்கும். அதுபோல், 24 எதிர்க்கட்சிகள் அடங்கிய 'இந்தியா' கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் காணொலி காட்சி மூலம் நடந்தது. அதில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

8 பிரச்சினைகள்

நாடாளுமன்றத்தில், பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதாக டிரம்ப் சொன்னது, உலக நாடுகளுக்கு எம்.பி.க்கள் குழு பயணம், பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம், நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம் உள்பட 8 பிரச்சினைகளை எழுப்புவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதுபோல், ஆளுங்கட்சியான பா.ஜனதா தரப்பில், ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் இல்லத்தில் மூத்த மத்திய மந்திரிகள் கூடி ஆலோசனை நடத்தினர். எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுப்பது பற்றி வியூகம் வகுத்தனர். அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க தயாராக இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com