

புதுடெல்லி,
நாடாளுமன்றநிலைக்குழுக் கூட்டம் காணொலியில்கூட நடத்தப்படாது என மக்களவை, மாநிலங்களவை தலைமை அதிகாரிகள் கூறியிருப்பது வேதனையளிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் நிலைக்குழுக் கூட்டங்களையும் கூட்டி பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டு அழுத்தம் கொடுக்க அதிகாரிகள்தான் உதவ வேண்டும். ஆனால், அவர்களே காணொலி மூலம் கூட்டம் இல்லை எனக் கூறுவது மிகுந்த வேதனையாக இருக்கிறது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலக நாடுகளில் எல்லாம் நாடாளுமன்றம் இயங்குகிறது. நம்முடைய நாடாளுமன்றமும் இதுபோன்ற இக்கட்டான சூழலில், நிலையில் கூடி விவாதிக்க வேண்டும். ஆனால், நாடாளுமன்றம் இயங்காவிட்டாலும், குறைந்தபட்சம் நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தையாவது காணொலி மூலம் கூட்ட வேண்டும்.
நாடாளுமன்ற தலைமை அதிகாரிகள் முதலில் பாதுகாப்பு மற்றும் ராணுவத் தயாரிப்பு, கொரோனா பெருந்தொற்று சூழல் ஆகியவற்றுக்கான வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும். பெருந்தொற்று தொடர்பாக நிலைக்குழு வெளிப்படையாக விவாதிக்க வேண்டும். நாடாளுமன்றத்தை கூட்ட முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் நிலைக்குழுக் கூட்டம் நடத்த அனுமதிக்கலாம்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.