நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து - நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் தகவல்

இந்த ஆண்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்படுவதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து - நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் தகவல்
Published on

புதுடெல்லி,

நவம்பர் மாத இறுதியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படுவது வழக்கமாகும். இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இதுவரை குளிர்கால கூட்டத் தொடர் நடத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. அடுத்த ஆண்டு ஜனவரியில் பட்ஜெட் தொடருடன் சேர்த்து குளிர்கால கூட்டத் தொடர் நடத்துவது குறித்தும் பரிசீலிக்கப்படுவதாக கூறப்பட்டது.

இது குறித்து மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா அளித்த பேட்டியில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நடத்த மக்களவை தயாராக உள்ளதாகவும், இதுபற்றி நாடாளுமன்ற விவகார மத்திய அமைச்சரவைதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு காரணமான வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க ஒரு கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் விடுத்த கோரிக்கைக்கு நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கடிதம் மூலம் பதிலளித்துள்ளார். அந்த கடிதத்தில் இந்த முறை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்படுவதாகவும் நேரடியாக ஜனவரியில் பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்டலாம் என அனைத்து கட்சிகளும் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com