பீகாரில் நடந்து வரும் ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை

பீகாரில் நடந்து வரும் ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு பாட்னா ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.
பீகாரில் நடந்து வரும் ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை
Published on

கோலார் பொதுக்கூட்டம்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது, 'மோடி' என்ற குடும்பப்பெயர் வைத்திருப்பவர்கள் எல்லாம் திருடர்களாக இருப்பது ஏன்? என்று கேட்டார். பிரதமர் மோடி, நிரவ் மோடி, லலித் மோடி ஆகியோரை குறிவைத்து அவர் அப்படி பேசினார்.

அவர் மோடி சமுதாயத்தை இழிவுபடுத்திவிட்டதாக கூறி, பீகார் முன்னாள் துணை முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான சுஷில்குமார் மோடி, பாட்னாவில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

ராகுல்காந்தி மனு

இவ்வழக்கில், இன்று (செவ்வாய்க்கிழமை) கோர்ட்டில் ஆஜராகுமாறு ராகுல்காந்திக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதே பேச்சுக்கான அவதூறு வழக்கில், சூரத் கோர்ட்டு, ராகுல்காந்திக்கு ஏற்கனவே 2 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. இதை சுட்டிக்காட்டி, பாட்னா ஐகோர்ட்டில் ராகுல்காந்தி ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், இதே வழக்கில் ஏற்கனவே தண்டிக்கப்பட்டு இருப்பதால், ஒரே குற்றத்துக்காக மீண்டும் தன்னை விசாரணைக்கு உட்படுத்த முடியாது என்று அவர் கூறியிருந்தார்.

இடைக்கால தடை

இந்த மனு, நீதிபதி சந்தீப்குமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கோர்ட்டில் நடந்து வரும் அவதூறு வழக்கு விசாரணைக்கு அவர் மே 15-ந் தேதி வரை இடைக்கால தடை விதித்தார்.

அன்றைய தினம், சுஷில்குமார் மோடி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படும் என்று அவரது வக்கீல் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com