

திருவனந்தபுரம்,
நஷ்டத்தை சமாளிக்க ரூ.40 லட்சம் கொடுத்தால் உங்கள் பெயரில் அரசு பஸ் இயக்கப்படும் என்று கேரளம் அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
கேரளத்தில் அரசு போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. அதாவது பஸ்களை இயக்காவிட்டால் லாபம் என்ற நிலையில் போக்குவரத்து கழகம் உள்ளது. தற்போது அமலுக்கு வந்துள்ள பெண்களுக்கான இலவச சேவை மூலம் ஆண்டுக்கு மேலும் ரூ.800 கோடி கூடுதல் நஷ்டம் ஏற்படும் என கணக்கிடப்பட்டு உள்ளது.
இதனால் அரசு போக்குவரத்து கழகம் காலாவதியான பஸ்களுக்கு பதிலாக புதிய பஸ்கள் வாங்க கூட நிதியின்றி தவித்து வருகிறது. புதிய பஸ் வாங்க கோழிக்கோடு நகர சர்வீஸ் கூட்டுறவு வங்கி அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.40 லட்சம் நன்கொடை வழங்கியது. இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் புதிய பஸ்கள் வாங்க தங்களது பொது நிதியில் இருந்து நன்கொடை வழங்க ஒப்புதல் அளித்துள்ளன.
இத்தகைய நன்கொடை நிதி மூலமாக ரூ.800 கோடியில் 2 ஆயிரம் பஸ்கள் வாங்க கேரள அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. இந்த பஸ்கள் கூட்டுறவு சங்கங்களின் பெயரில் இயக்கப்பட உள்ளன. மேலும் புதிய பஸ் வாங்க ரூ.40 லட்சம் செலுத்தினால், பணம் கொடுப்பவர் பெயரில், அவரது புகைப்படத்துடன் பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.