அமைதி போராட்டம்; அரசியல் சாசனம் தந்த உரிமை டெல்லி முதல் மந்திரி

விவசாயிகள் அமைதியான முறையில் பேரணி நடத்துவதற்கு தடுக்கப்படுகிறார்கள் என டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
அமைதி போராட்டம்; அரசியல் சாசனம் தந்த உரிமை டெல்லி முதல் மந்திரி
Published on

புதுடெல்லி,

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை திரும்ப பெற வலியுறுத்தியும் பஞ்சாப் மற்றும் அரியானா மாநில விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாக செல்ல முடிவு செய்தனர்.

இதற்காக அவர்கள் டிராக்டரிலும், நடந்தும் பேரணியாக செல்ல தொடங்கினர். இதனை தொடர்ந்து, டெல்லி மற்றும் அரியானா எல்லையான சிங்கு எல்லை பகுதியில் துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஆளில்லா விமானம் வழியேயும் போராட்டக்காரர்களை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

போராட்டத்தில் வன்முறை பரவிவிடாமல் தடுக்க கலகக்காரர்களை கலைய செய்ய டெல்லி போலீசாரின் வஜ்ரா வாகனமும் தயார் நிலையில் வைக்கப்பட்டது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் அந்த வழியே போகும் வாகனங்களை கண்காணித்து அனுப்பும் பணியும் நடந்து வருகிறது.

பா.ஜ.க. ஆளும் அரியானா அரசு பஞ்சாப் எல்லை பகுதியை ஒட்டிய அனைத்து நுழைவு பகுதிகளையும் மூடியது. 144 தடை உத்தரவும் பிறப்பித்து உள்ளது.

இந்நிலையில், அரியானாவின் அம்பாலா பகுதியருகே சம்பு எல்லை பகுதியில் திரண்டு வந்த விவசாயிகளை கலைந்து போகும்படி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கேட்டு கொண்டனர். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதனை ஏற்று கொள்ளாமல் போலீசார் தடுப்புக்காக போட்டிருந்த தடுப்பான்களை பாலத்தில் இருந்து தூக்கி கீழே போட்டனர்.

இதனை தொடர்ந்து அவர்கள் மீது நீர் பாய்ச்சி அடிக்கப்பட்டது. சிலர் கொடிகளை ஏந்தியபடி முன்னேற முயன்றனர். ஆனால், போலீசார் தொடர்ந்து நீரை பாய்ச்சி அடித்தனர். இதனால், போராட்டக்காரர்கள் அங்குமிங்கும் அலைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் கற்களை வீசி எறிந்தனர்.

இந்த நிலையில், டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், வேளாண் மசோதாக்களை (தற்பொழுது சட்டங்கள்) திரும்ப பெறுவதற்கு பதிலாக, அமைதியான முறையில் பேரணி செல்லும் விவசாயிகள் தடுக்கப்படுகிறார்கள். அவர்கள் மீது நீர் பாய்ச்சி விரட்டி அடிக்கின்றனர். அமைதியான முறையில் பேரணி நடத்துவது என்பது அரசியல் சாசனம் தந்த உரிமையாகும் என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com