பெகாசஸ் விவகாரம்: மத்திய மந்திரிக்கு எதிரான உரிமை மீறல் தீர்மானம் பற்றி பரிசீலனை - வெங்கையா நாயுடு தகவல்

‘பெகாசஸ்’ உளவு விவகாரத்தில் மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவுக்கு எதிரான உரிமை மீறல் தீர்மானம் குறித்து ஆய்வு செய்து வருவதாக வெங்கையா நாயுடு கூறினார்.
பெகாசஸ் விவகாரம்: மத்திய மந்திரிக்கு எதிரான உரிமை மீறல் தீர்மானம் பற்றி பரிசீலனை - வெங்கையா நாயுடு தகவல்
Published on

புதுடெல்லி,

இஸ்ரேல் நாட்டை சேர்ந்த என்.எஸ்.ஓ. குழுமம், பெகாசஸ் என்ற உளவு செயலியை உருவாக்கி உள்ளது. அதை பயன்படுத்தி, இந்தியாவில் அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகள், மனித உரிமைவாதிகள் ஆகியோரின் செல்போன் உளவு பார்க்கப்பட்டதாக கடந்த ஆண்டு தகவல் வெளியானது.

இதை வைத்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தாடரில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் கூட்டத்தொடர் முடங்கியது.

அதற்கு மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், உளவு செய்தியில் முகாந்திரம் இல்லை. இந்திய ஜனநாயகத்தை களங்கப்படுத்த அச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது. உளவு செயலியை மத்திய அரசு வாங்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார்.

ஆனால், கடந்த 2017-ம் ஆண்டில் பெகாசஸ் உளவு செயலியை இந்திய அரசு வாங்கியதாக கடந்த வாரம் அமெரிக்க ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது. இதன் அடிப்படையில், மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், சபையில் தவறான தகவல் கூறியதாக அவர் மீது 3 மாநிலங்களவை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உரிமை மீறல் தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

இந்தநிலையில், நேற்று காலை நாடாளுமன்ற மாநிலங்களவை கூடியது. பெகாசஸ் விவகாரம் குறித்து 267-வது விதியின் கீழ் விவாதிக்க சில எம்.பி.க்கள் கொடுத்த நோட்டீஸ் நிராகரிக்கப்படுவதாக சபை தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:-

மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவுக்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினர் கே.சி.வேணுகோபால் மற்றும் 2 எம்.பி.க்கள் கொடுத்த உரிமை மீறல் தீர்மானங்களை நான் ஆய்வு செய்து வருகிறேன்.

ஆய்வுக்கு பிறகு மத்திய மந்திரியிடம் விளக்கம் கேட்கப்படும். விளக்கத்தின் அடிப்படையில், தீர்மானத்தை ஏற்பதா? நிராகரிப்பதா? என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com