

புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா தொற்று சீராக குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மராட்டியம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு குறையவில்லை. கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் சில மாநிலங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தலை கணக்கில் கொண்டு, ஐந்து மாநிலங்களில் இருந்து டெல்லி வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட உள்ளது. இந்த தகவலை டெல்லியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விரைவில் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூத்த அதிகாரி கூறும் போது, மராட்டியம், கேரளம், பஞ்சாப், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களிலிருந்து சனிக்கிழமை முதல் டெல்லி வரும் பயணிகள், கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து மாநிலங்களிலும் நாள்தோறும் தொற்று அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மார்ச் 15 ஆம் தேதி வரை இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றார்.