கொரோனா பரிசோதனைக்கு பயந்து கிராமத்தை காலி செய்து வெளியேறிய மக்கள்...!

கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க, கிராம மக்களுக்கு வீடு, வீடாக சென்று சுகாதாரத்துறை ஊழியர்கள் கொரோனா பரிசோதனை நடத்தி வருகின்றனர்.
கொரோனா பரிசோதனைக்கு பயந்து கிராமத்தை காலி செய்து வெளியேறிய மக்கள்...!
Published on

ஹாவேரி,

கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக வருகிற 14-ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. கிராமப்புறங்களில் கொரோனா பரவலை தடுக்க, கிராம மக்களுக்கு வீடு, வீடாக சென்று சுகாதாரத்துறை ஊழியர்கள் கொரோனா பரிசோதனை நடத்தி வருகின்றனர். அதுபோல், ஹாவேரி மாவட்டம் பேடகி தாலுகா கிரேசுனஜி கிராம பஞ்சாயத்தில் உள்ள சிக்கஜனகி கிராமத்தில் வசிப்பவர்களுக்கும் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, சிக்கஜனகி கிராமத்திற்கு அங்கன்வாடி ஊழியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் சென்றார்கள். ஆனால் கொரோனா பரிசோதனைக்கு ஊழியர்கள் வருவது பற்றி அறிந்த கிராம மக்கள் தங்களது வீடுகளை பூட்டி விட்டு வெளியே புறப்பட்டு சென்று விட்டனர். அந்த கிராமத்தில் 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பெரும்பாலானவர்கள் தங்களது வீட்டை பூட்டி விட்டு பக்கத்து கிராமத்திற்கும், பலர் வேலைக்கும் அதிகாலையிலேயே சென்று விட்டனர்.

இதனால் கிராமமே மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. கொரோனா பரிசோதனைக்கு பயந்து கிராமத்தை காலி செய்துவிட்டு மக்கள் வெளியேறியது தெரியவந்தது. இதையடுத்து, கிராமத்தில் இருந்த விரல் விட்டு எண்ணும் நபர்களுக்கே கொரோனா பரிசோதனை நடத்திவிட்டு ஊழியர்கள் புறப்பட்டு சென்றார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com