

புதுடெல்லி,
மத்திய சுகாதாரத்துறை அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷண், நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் ஆகியோர் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர்.
அவர்கள் கூறியதாவது:-
நாடு முழுவதும் 33 மாவட்டங்களில் வாராந்திர தொற்று பாதிப்பு விகிதம் 10 சதவீதத்துக்கு மேல் உள்ளது. 23 மாவட்டங்களில் பாதிப்பு விகிதம் 5 முதல் 10 சதவீதமாக உள்ளது. பண்டிகை காலங்களில், கட்டுப்பாட்டு மண்டலங்களிலும், தொற்று பாதிப்பு 5 சதவீதத்துக்கு மேல் உள்ள மாவட்டங்களிலும் கூட்டமாக திரள தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள், நடமாட முடியாதவர்களுக்கு வீட்டுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும். 18 வயதுக்கு மேற்பட்டோரில் இதுவரை 66 சதவீதம்பேர் ஒரு டோஸ் தடுப்பூசியாவது போட்டுள்ளனர். 23 சதவீதம்பேர், 2 டோசும் போட்டுள்ளனர். இது இந்தியாவின் முக்கியமான மைல்கல்.
இந்தியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்டு, இங்கிலாந்து செல்பவர்களை 10 நாள் கட்டாய தனிமைப்படுத்தும் விதிமுறை, மிகவும் பாரபட்சமானது. இதுதொடர்பாக இரு நாடுகளிடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் தீர்வு காணப்படும் என்று எதிர்பார்க்கிறோம். இங்கிலாந்துக்கு அதே பாணியில் பதிலடி கொடுக்க நமக்கு உரிமை இருக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.