கர்நாடகாவில் திரையரங்குகளில் 50% இருக்கைகளை நிரப்ப அனுமதி; வரும் 7ந்தேதி முதல் அமல்

கர்நாடகாவில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி திரையரங்குகளில் 50% இருக்கைகளை நிரப்ப அனுமதி வழங்கும் முடிவு வருகிற 7ந்தேதி முதல் அமல்படுத்தப்படும்.
கர்நாடகாவில் திரையரங்குகளில் 50% இருக்கைகளை நிரப்ப அனுமதி; வரும் 7ந்தேதி முதல் அமல்
Published on

பெங்களூரு,

கர்நாடகாவில் கொரோனா பாதிப்புகளுக்கு இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து தொற்று உயர்ந்து வரும் சூழலில், புதிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.

இதன்படி, தர்ணா போராட்டம் நடத்துவதற்கும் மற்றும் பேரணிகள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்படுகிறது. பொது போக்குவரத்தில் இருக்கைக்கு கூடுதலாக மக்கள் பயணிக்க அனுமதி கிடையாது. வீட்டில் இருந்து பணிபுரிவது கூடியவரை தொடர வேண்டும்.

10 மற்றும் 12ம் வகுப்புகளை தவிர்த்து அனைத்து பள்ளிகளும் மற்றும் விடுதிகளும் மூடப்படும். வாரியம் மற்றும் பல்கலை கழகங்களுக்கான தேர்வுகளுக்கு தயாராவோர் வகுப்புகளுக்கு செல்லலாம். மற்ற மாணவர்களுக்கான வகுப்புகள் மூடப்படும்.

உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் நீச்சல் குளங்கள் தொடர்ந்து மூடியபடி இருக்கும். திரையரங்குகள், பார்கள் மற்றும் உணவு விடுதிகளில் 50 சதவீத இருக்கைகளை நிரப்பி கொள்ளவே அனுமதி வழங்கப்படும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளை நிரப்பி கொள்வதற்கான அனுமதியை அமல்படுத்துவது வருகிற 7ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. அதன்பின்னரே இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும் என கர்நாடக அரசு அறிவித்து உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com