69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனு: 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனு: 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Published on

மனு தாக்கல்

சென்னையைச் சேர்ந்த மாணவிகள் வி.சஞ்சனா, எஸ்.அகிலா அன்னபூரணி ஆகியோர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 21-ந் தேதி ஒரு இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோருக்கு 69 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வகைசெய்யும் தமிழக அரசின் சட்டத்தை அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.அந்த கோரிக்கையைப் பரிசீலிக்க மறுத்த நீதிபதிகள், இடைக்கால மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும், தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான பிரதான வழக்கு மீது 2019-ம் ஆண்டு நவம்பரில் விசாரணை நடைபெறும் என உத்தரவில் தெரிவித்தனர்.

மூல மனுதாரர்

இதற்கிடையே, மூல மனுதாரர் சி.வி.காயத்ரி சார்பில் வக்கீல் சிவபாலமுருகன் கடந்த டிசம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு இடைக்கால மனு தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். மராட்டிய மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இடஒதுக்கீட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்துவரும் அரசியல்சாசன அமர்வு இந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.அந்த இடைக்கால மனு மீதான விசாரணை, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு முன் நேற்று நடைபெற்றது.

நீதிபதிகள் உத்தரவு

மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல்கள் துஷ்யந்த் தவே, கே.எம்.விஜயன் ஆஜராகி, தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும், மராத்தா இடஒதுக்கீட்டை விசாரிக்கும் சுப்ரீம் கோர்ட்டு அமர்வு இந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டனர்.அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி, இந்த மனு காலாவதியாகிவிட்டதால், இதை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com