மைசூரு தசராவை தொடங்கி வைக்க எழுத்தாளர் பானு முஷ்டாக் அழைக்கப்பட்டதை எதிர்த்த மனு தள்ளுபடி

மைசூரு தசராவை தொடங்கி வைக்க எழுத்தாளர் பானு முஷ்டாக் அழைக்கப்பட்டதை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டில் எச்.எஸ். கவுரவ் என்பவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், "சாமுண்டீஸ்வரி கோவிலில் மைசூரு தசரா விழாவை தொடங்கி வைப்பவர் இந்துவாக இருக்க வேண்டும். ஆனால், இவ்விழாவை தொடங்கிவைக்க அழைக்கப்பட்டுள்ள எழுத்தாளர் பானு முஷ்டாக் முஸ்லிம் என்பதால் இந்து மத பூஜைகளைச் செய்ய முடியாது. இது மரபை மீறுவதாகும். இதனால் இந்துக்களின் உணர்வுகள் புண்படும்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது நீதிபதிகள், அரசமைப்பு சாசன முகப்புரை என்ன சொல்கிறது? அரசு நடத்தும் விழாவில் எப்படி பாகுபாடு இருக்க முடியும்? என்று கேட்டனர்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல், கோவிலுக்குள் நடக்கும் பூஜை மதசார்பற்றதாகி விடாது. பூஜை என்பது மைசூர் தசரா விழாவின் ஒரு பகுதியாகும். விழாவுக்கு அழைக்கப்படும் நபர் எங்கள் மதத்துக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். இதுபோன்ற சூழலில் அவரை அழைக்க முடியாது என வாதிட்டார்.
அவரது வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், மைசூரு தசராவை தொடங்கி வைக்க புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் பானு முஷ்டாக் அழைக்கப்பட்டதை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.






