

திருச்சூர்
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணை மந்திரி சுரேஷ் கோபி திருச்சூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலையை கட்டுக்குள் வைக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. மேலும் விலையை கட்டுக்குள் வைத்திருப்பதை மத்திய அரசு மிக உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. உலக அளவில் இயற்கை எரிவாயு சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை சற்று உயர்த்தப்பட்டு உள்ளது.
தற்போது கச்சா எண்ணெய் இறக்குமதி குறித்து அக்கறை கொண்டுள்ளோம். கச்சா எண்ணெய் வரத்து மற்றும் மேற்கு ஆசிய போர் சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு மறுஆய்வு செய்யப்படும். மேற்கு ஆசியாவில் நிலவும் போர் சூழலால் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வினியோகத்தில் ஏற்பட்ட தடங்கல்களை தொடர்ந்து இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.