

திருவனந்தபுரம்,
கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி ஆட்சி செய்து வருகிறது. நடப்பு ஆண்டில் கேரளா சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. இந்நிலையில், திருவனந்தபுரம் நகரில் கேரள அரசு சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது.
ஆனால், இந்த நிகழ்ச்சி தேர்தலை முன்னிட்டு விளம்பர நோக்கில் நடத்தப்படும் ஒன்று என கூறி, காங்கிரசின் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதாலா, நிகழ்ச்சியை புறக்கணிக்கும்படி கட்சியின் சக தலைவர்களிடம் கேட்டு கொண்டார்.
இந்நிலையில், பஞ்சாயத்து ராஜுக்கான முன்னாள் மத்திய மந்திரி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மணி சங்கர் அய்யர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர் பேசும்போது, பஞ்சாயத்து ராஜில் இந்தியாவில் தலைவராக கேரளா உள்ளது. என்னுடைய கட்சியினர் இதில் கலந்து கொள்ளாததற்காக நான் அதிகம் வருந்துகிறேன் என்றார்.
கேரளாவில் உறுதியாக பினராயி விஜயன் மீண்டும் முதல்-மந்திரியாக வருவார் என அப்போது கூறினார். அய்யர் மற்றும் அமர்தியா சென் போன்றோரை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் என கேட்டு கொண்ட நிலையில், அவர் பங்கேற்றது மட்டுமின்றி விஜயனே மீண்டும் ஆட்சியை தக்க வைப்பார் என கூறியது காங்கிரஸ் கட்சியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.