

புனே,
மராட்டியத்தில் மாலேகாவன் துணை மேயராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிஹல் அகமதுவின் அலுவலகத்தில், 18-ம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட திப்பு சுல்தான் உருவ படம் ஒன்று வைக்கப்பட்டது.
இதற்கு சிவசேனா, பா.ஜ.க. மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சச்சின் சாவந்த் இன்று பேசும்போது, கடந்த காலத்தில் பா.ஜ.க. தலைவர்கள் திப்பு சுல்தானுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அவரை புகழ்ந்தும் பேசியுள்ளனர். ஆனால் இரட்டை நிலைப்பாட்டை அக்கட்சி தற்போது எடுத்துள்ளது. இது என்ன வகையான பாசாங்குதனம்? என கேட்ட அவர், கடவுள் ராமரின் பெயர் பொறித்த மோதிரம் ஒன்றை அணியும் வழக்கம் கொண்டவர் திப்பு சுல்தான் என்றும் கூறினார்.
திப்பு சுல்தானுக்கு ஆதரவாக பா.ஜ.க. செயல்பட்டதற்கு எடுத்துக்காட்டாக சில விசயங்களையும் குறிப்பிட்டார். மும்பையில் ஒரு சாலைக்கு ஷாகீத் திப்பு சுல்தான் மார்க் என பெயர் வைக்க வேண்டும் என பா.ஜ.க. மாநகராட்சியாளர்கள் 2013-ம் ஆண்டில் முன்மொழிந்தனர்.
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியான பா.ஜ.க. மூத்த தலைவர் எடியூரப்பா, திப்பு சுல்தான் கல்லறைக்கு சென்று அவரை புகழ்ந்து பார்வையாளர்கள் புத்தகத்தில் எழுதினார். 2017-ம் ஆண்டில் அப்போது ஜனாதிபதியாக இருந்த ராம்நாத் கோவிந்த், கர்நாடக சட்டசபையில் திப்பு சுல்தானை புகழ்ந்து பேசினார் என்று கூறினார்.