

சர்தார் வல்லபாய் பட்டேலின் 142வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அவரை நினைவு கூரும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி ஒற்றுமைக்கான ஓட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார்.
புதுடெல்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் தொடங்கிய இந்த ஓட்டத்தில் சர்தார் சிங், தீபா கர்மாகர், சுரேஷ் ரெய்னா மற்றும் கர்ணம் மல்லேஸ்வரி உள்ளிட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் என பலர் கலந்து கொண்டனர்.
ஓட்டத்தினை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, சர்தார் பட்டேலின் பிறந்த தினத்தில் அவரை நாம் வணங்குவோம். இந்தியாவிற்கு அவர் ஆற்றிய சேவை மற்றும் பங்கு என்றும் மறக்க முடியாதது.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் மற்றும் நாடு விடுதலை அடைந்த தொடக்க வருடங்களில் நாட்டிற்கு அவர் ஆற்றிய பங்கு அனைவரையும் பெருமை கொள்ள செய்கிறது என்றும் கூறியுள்ளார்.
1.5 கி.மீட்டர் தொலைவு கொண்ட இந்த ஓட்டம் இந்தியா கேட் அருகே நிறைவடைந்தது.
இந்நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள், மூத்த அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.