பிரதமர் பட்டப்படிப்பு விவகாரம்: கெஜ்ரிவாலின் மனுவை ஏற்க குஜராத் ஐகோர்ட்டு மறுப்பு

ஆமதாபாத் கோர்ட்டின் சம்மனுக்கு இடைக்கால தடை விதிக்க குஜராத் ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்தது.
பிரதமர் பட்டப்படிப்பு விவகாரம்: கெஜ்ரிவாலின் மனுவை ஏற்க குஜராத் ஐகோர்ட்டு மறுப்பு
Published on

காந்திநகர்,

பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு விவரங்களை வெளியிடக்கோரி ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதி, பிரதமரின் பட்டப்படிப்பு விவரங்களை வழங்கத் தேவையில்லை என்று உத்தரவிட்டார். மேலும் மனு தாக்கல் செய்த கெஜ்ரிவாலுக்கு ரூ.25,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

இதற்கிடையே பிரதமரின் பட்டம் தொடர்பாக குஜராத் பல்கலைக்கழகத்தை விமர்சித்து கெஜ்ரிவால் மற்றும் அவரது கட்சி எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோர் கருத்துக்களை வெளியிட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் இருவர் மீதும் ஆமதாபாத் பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் குஜராத் பல்கலைக்கழக பதிவாளர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராக அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சஞ்சய் சிங் எம்.பி.க்கு சம்மன் அனுப்ப ஆமதாபாத் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சஞ்சய் சிங் எம்.பி. தாக்கல் செய்த மனுவை குஜராத் ஐகோர்ட்டு நீதிபதி சமீர் தவே விசாரித்தார். அப்போது ஆமதாபாத் கோர்ட்டின் சம்மனுக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதி, மனு தொடர்பாக பதிலளிக்க குஜராத் பல்கலைக்கழக பதிவாளர் பியூஷ் பட்டேலுக்கு உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com