

ஜர்சுகுடா,
ஒடிசா மாநிலத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி ஜர்சுகுடா பகுதியில் ரூ.210 கோடி மதிப்பிலான புதிய விமான நிலையம் ஒன்றை இன்று திறந்து வைத்துள்ளார். மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இந்த விமான நிலையத்திற்கு ஒடிசா அரசு ரூ.75 கோடி வழங்கியுள்ளது.
ஒடிசா அரசுடன் இணைந்து இந்திய விமான கழகம் இதனை கட்டியுள்ளது. 1,027.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த விமான நிலையத்தில் 2,390 மீட்டர் அளவுள்ள நீண்ட ஓடுதளம் அமைக்கப்பட்டு உள்ளது. விமான நிலைய முனையம் 4 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் உள்ளது.
இந்த விமான நிலைய திறப்புக்கு பின்னர் பிரதமர் பேசும்பொழுது, ஒடிசாவில் பல வருடங்களாக ஒரே ஒரு பெரிய விமான நிலையம் உள்ளது. ஆனால் குஜராத்தில் கட்ச் மாவட்டத்தில் 5 விமான நிலையங்கள் உள்ளன.
ஒடிசாவின் இந்த 2வது விமான நிலையம் ஒரு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மாநிலம் ஆக ஒடிசாவை உருவாக்கும். தாது வளம் நிறைந்த பகுதியில் முதலீட்டாளர்களை ஈர்க்க உதவும் என பிரதமர் மோடி கூறினார்.
நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து நாட்டில் 450 விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில் கடந்த ஒரு வருடத்தில் 950 புதிய விமானங்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன என்றும் அவர் கூறினார்.