

புதுடெல்லி,
மத்திய அரசின் மிக முக்கியமான திட்டமான பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் மூன்று தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பிரதமர் மோடி, குவாஹாத்தியில் இருந்து 9.32 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 22-வது தவணையாக தலா ரூ.2,000 அனுப்பியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, மார்ச் 13 அன்று 9.32 கோடி விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.18,640 கோடியை நேரடியாக அனுப்பியுள்ளார். இதில் 2.15 கோடிக்கும் அதிகமான பெண் விவசாயிகளும் அடங்குவர். 2019-ல் இந்தத் திட்டம் தொடங்கியதில் இருந்து இதுவரை ரூ.4.27 லட்சம் கோடிக்கு மேல் பணம் கொடுக்கப்பட்டிருப்பது ஒரு வரலாற்று சாதனை என மத்திய விவசாயத்துறை மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.
பணம் வந்ததா என்பதை எப்படி செக் செய்வது?
முதலில், உங்கள் போனில் pmkisan.gov.in வெப்சைட்டைத் திறக்கவும். முகப்புப் பக்கத்தில் உள்ள 'Know Your Status' ஆப்ஷனைக் கிளிக் செய்யவும். இப்போது உங்கள் பதிவு எண்ணை (Registration Number) உள்ளிடவும். திரையில் தோன்றும் கேப்ட்சா குறியீட்டை (Captcha Code) டைப் செய்யவும். உங்கள் போனுக்கு வரும் ஓடிபி-ஐ உள்ளிட்டதும், உங்கள் முழு ஸ்டேட்டஸும் திரையில் தோன்றும்.
எல்லாம் சரியாக இருந்தும் உங்கள் கணக்கிற்கு 22-வது தவணைப் பணம் வரவில்லையா? கவலை வேண்டாம். அரசு உங்களுக்காக ஒரு டோல்-ஃப்ரீ ஹெல்ப்லைன் எண்ணை வழங்கியுள்ளது. 1800-115-526 என்ற எண்ணுக்கு போன் செய்து உங்கள் பிரச்சனையைச் சொல்லலாம். உங்கள் தவணைப் பணம் ஏன் வரவில்லை என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.
பிஎம் கிசான் திட்டத்தில் புதிதாகப் பதிவு செய்வது எப்படி?
நீங்கள் இன்னும் பிஎம் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் பலனைப் பெறவில்லை என்றால், புதிதாகப் பதிவு செய்யலாம். இதற்கு, முதலில் pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும். அங்கு 'New Farmer Registration' என்ற ஆப்ஷனைக் கிளிக் செய்யவும். உங்கள் ஆதார் எண், மொபைல் எண், மாநிலம் மற்றும் பிற தேவையான விவரங்களை நிரப்பி பதிவை முடிக்கவும்.
விதை, உரம் போன்ற இடுபொருட்களை வாங்கவும், விவசாயக் குடும்பங்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், விவசாயிகளுக்கு வருமான ஆதரவு அளிக்கும் நோக்கில் பிஎம் கிசான் சம்மான் நிதி வழங்கப்படுகிறது. இதற்காக வழங்கப்படும் தவணை தொகை நேரடியாகவே வங்கி கணக்கில் விழுகிறது.