

டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டம் சக்ரதாவில் உள்ள விகாஸ்நகருக்கு பைலா கிராமத்தில் இருந்து சிறிய ரக பேருந்து ஒன்று இன்று காலை சென்றுகொண் டிருந்தது. தியுதி அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக கவிழ்ந்து பள்ளத்தாக்கில் விழுந்தது. இதில் அந்த வாகனத்தில் இருந்த 13 பேர் பரிதாபமாக பலியாயினர். 4 பேர் காயமடைந்துள்ளனர். விபத்து நடந்த இடத்தில் உள்ளூர் மக்களின் உதவியுடன் போலீசார், மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே டேராடூன் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரணநிதியில் இருந்து கருணைத் தொகையாக ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.