

புதுடெல்லி,
இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 1950ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி ஏற்படுத்தப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் அதன் தொடக்க தினம் கொண்டாடப்பட்டு வந்தது.
61வது தொடக்க தினம் கொண்டாடப்பட்ட 2011ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில், தேசிய வாக்காளர் தினம் தொடர்பாக, சட்ட அமைச்சக முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதன் பெயரில் தேசிய வாக்காளர் தினமாக அந்த நாள் அனுசரிக்கப்பட்டு, வாக்குரிமையை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவரையும் வாக்களிக்க வைக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில் வாக்காளர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், தேசிய வாக்காளர் தினம் என்பது நமது ஜனநாயகக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், தேர்தல்களை சீராக நடத்துவதை உறுதிப்படுத்தவும், தேர்தல் ஆணையத்தின் குறிப்பிடத்தக்க பங்களிப்பைப் பாராட்டும் ஒரு சந்தர்ப்பமாகும். இளைஞர்கள் மத்தியில் வாக்காளர் பதிவை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நாள் இது என்று பதிவிட்டுள்ளார்.