'சந்திரயான்-3', புதிய நாடாளுமன்றம், ஜி-20 மாநாடு, மகளிர் மசோதா: 4 முக்கிய பணிகளை 3 மாதங்களில் முடித்தார் பிரதமர் மோடி- அமித்ஷா

‘சந்திரயான்-3’, புதிய நாடாளுமன்றம், ஜி-20 மாநாடு, மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்று 4 முக்கிய பணிகளை 3 மாதங்களில் பிரதமர் மோடி முடித்தார் என அமித்ஷா புகழாரம் சூட்டினார்.
'சந்திரயான்-3', புதிய நாடாளுமன்றம், ஜி-20 மாநாடு, மகளிர் மசோதா: 4 முக்கிய பணிகளை 3 மாதங்களில் முடித்தார் பிரதமர் மோடி- அமித்ஷா
Published on

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, குஜராத் மாநிலத்தில் தனது மக்களவை தொகுதியான காந்திநகரில் பல்வேறு மேம்பாட்டு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். சில பணிகளை தொடங்கிவைத்தார்.

50 ஆண்டுகள் ஆகும்

அப்போது அமித்ஷா பேசியதாவது:-

'நாட்டின் 4 முக்கிய பணிகளை பிரதமர் நரேந்திர மோடி 3 மாதங்களில் முடித்தார் என்று என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும். அதில் சாதாரணமாக ஒரு பணியை முடிப்பதற்கே 50 ஆண்டுகள் ஆகும். இந்த சாதனை, மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, இந்தியாவுக்கு உலகத்தில் அதற்குரிய இடத்தை பெற்றுத் தருவதில் உறுதியாக இருப்பதைக் காட்டுகிறது.

'இஸ்ரோ'வுக்கு புத்துயிரும், அதன் விஞ்ஞானிகளுக்கு ஊக்கமும் அளித்து, 'சந்திரயான்-3' விண்கல வெற்றியை பிரதமர் மோடி சாத்தியமாக்கினார். அதனால் நமது மூவர்ண கொடியை நிலவில் உலகம் கண்டிருக்கிறது.

புதிய நாடாளுமன்றத்தில் மகளிர் மசோதா

அவரது வழிகாட்டலில், புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு, புனிதமான விநாயகர் சதுர்த்தி அன்று தொடங்கப்பட்டிருக்கிறது. அங்கு முதலாவதாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மகளிர் சக்திக்கு உரிய மரியாதையை மோடி அளித்திருக்கிறார்.

ஜி-20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய பிரதமர் மோடி, டெல்லி பிரகடனத்தை அனைத்து நாடுகளும் ஒரு மனதாக வெளியிட வைத்தார். வளர்ந்த, வளரும் நாடுகள் என இரு தரப்புடனும் இந்தியா இருக்கும் செய்தியை உலகத்துக்கு அனுப்பினார்.

விஸ்வகர்மா திட்டம்

நாட்டின் மேம்பாட்டுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு அளித்து, ஆனால் சமூகத்தில் பின்தங்கியுள்ளவர்களை முன்னேற்றும் நோக்குடன் விஸ்வகர்மா திட்டத்தையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கியுள்ளார்.'

இவ்வாறு அவர் பேசினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com