

புதுடெல்லி,
உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்கு 4 நாள் பயணமாக பிரதமர் மோடி புறப்பட்டு சென்றுள்ளார்.. முதற்கட்டமாக உஸ்பெகிஸ்தான் செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதில் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், பொருளாதாரம், சுகாதாரம், கல்வி, முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
உஸ்பெகிஸ்தான் பயணத்தை முடித்துக் கொண்டு கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கிற்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் பிராந்திய பாதுகாப்பு, பயங்கரவாத தடுப்பு, இணைப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
மாநாட்டின் இடையே ரஷிய அதிபர் விளாடிமிர் புதினையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேச உள்ளார். இந்தியா-ரஷியா இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் முக்கிய சர்வதேச விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய ஆசிய நாடுகளுடனான இந்தியாவின் உறவை மேலும் வலுப்படுத்தவும், பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் பிரதமர் மோடியின் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.