முன்னாள் மத்திய மந்திரி ஸ்ரீனிவாசா பிரசாத் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் உணவு மற்றும் பொது விநியோக மந்திரியாக ஸ்ரீனிவாசா பிரசாத் இருந்தார்.
முன்னாள் மத்திய மந்திரி ஸ்ரீனிவாசா பிரசாத் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
Published on

பெங்களூரூ,

முன்னாள் மத்திய மந்திரியும் கர்நாடக பா.ஜனதா எம்.பி.,யுமான ஸ்ரீனிவாசா பிரசாத் (வயது 76) காலமானார். சமீபகாலமாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.

இவர் 1976 ல் ஜனதா கட்சியில் சேர்ந்து அரசியல் பணியை துவக்கினார். ஐக்கிய ஜனதாதளம், ஜனதாதளம் எஸ் உள்ளிட்ட கட்சியிலும் அவர் சேர்ந்து பணியாற்றி இறுதியில் பா.ஜனதாவில் சேர்ந்தார்.

1999 முதல் 2004 வரையிலான வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் உணவு மற்றும் பொது விநியோக மந்திரியாக இருந்தார். 2013ல் சித்தராமையா ஆட்சியில் கர்நாடக வருவாய் துறை மந்திரி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். தற்போது சாம்ராஜ்நகர் தொகுதி எம்.பியாக இருந்தார். சாம்ராஜ் நகர் தொகுதியில் 6 முறை எம்.பி.,யாக வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், ஸ்ரீனிவாசா பிரசாத் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

பா.ஜனதாவின் மூத்த தலைவரும் சாம்ராஜ் நகர் தொகுதியின் எம்.பி.யுமான ஸ்ரீனிவாசா பிரசாத்தின் மறைவு மிகவும் வேதனை அளிக்கிறது. அவர் சமூக நீதிக்காக பாடுபட்டவர், ஏழைகள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com