

புதுடெல்லி,
மராட்டிய மாநில துணை முதல் மந்திரியாக இருந்து வந்தவரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் கடந்த 28-ந்தேதி விமான விபத்தில் பலியானார். இதைத்தொடர்ந்து, பாஜக - சிவசேனா கூட்டணியில் தேசியவாத காங்கிரஸை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியாக, அஜித் பவார் மனைவி சுனேத்ரா பவாருக்கு துணை முதல் மந்திரி பதவி வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி சுனேத்ரா பவார் இன்று மாலை 5 மணிக்கு துணை முதல் மந்திரியாக பதவியேற்றார். அவருக்கு கலால் மற்றும் விளையாட்டுத்துறை ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தேசியவாத காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. மராட்டிய பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச்சில் நடைபெற உள்ளதால், நிதித்துறையை தற்காலிகமாக முதல்வர் பட்னாவிஸ் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். பின்னர் அது தேசியவாத காங்கிரஸிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மராட்டிய துணை முதல்வராக பதவியேற்ற முதல் பெண் என்ற பெருமையை சுனேத்ரா பவார் பெற்றுள்ளார். இந்த நிலையில் மராட்டிய துணை முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ள சுனேத்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
மராட்டியத்தின் துணை முதல்வராக தனது பதவிக் காலத்தைத் தொடங்கும் சுனேத்ரா பவாருக்கு வாழ்த்துகள். இந்தப் பொறுப்பை வகிக்கும் முதல் பெண் அவர்தான். மாநில மக்களின் நலனுக்காக அவர் அயராது பாடுபடுவார் என்றும், மறைந்த அஜித் பவாரின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவார் என்றும் நான் நம்புகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.