

புதுடெல்லி,
கடந்த ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. இதில் 761 பேர் வெற்றி பெற்றனர். இந்நிலையில் சிவில் சர்வீசஸ் தேர்வில் வென்றவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், உங்களுக்கு மக்கள் பணியில் உற்சாகமும், திருப்தியும் அளிக்கும் வாழ்க்கை காத்திருக்கிறது. இந்தியாவின் பயணத்தின் முக்கியமான காலகட்டத்தில் நீங்கள் குறிப்பிடத்தக்க நிர்வாகப் பங்கை ஆற்றப்போகிறீர்கள்.
அதேநேரம், சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெறாத இளம் நண்பர்களுக்கும் நான் ஒன்று கூற விரும்புகிறேன். நீங்கள் அறிவுத்திறன் மிக்கவர்கள். இன்னும் பல முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ளலாம். அதேவேளையில், நாட்டில் வேறு பல வாய்ப்புகளும் நிறைந்திருக்கின்றன. நீங்கள் எடுக்கும் எந்த முடிவுக்கும் எனது வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.