நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி

நேபாள மக்களுடனும் அந்நாட்டு அரசுடனும் நாம் துணை நிற்கிறோம் என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
புதுடெல்லி,
நேபாளத்தில் பருவமழைக்காலம் தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக கோஷி, மாதேஸ், பாக்மதி, கண்டகி, லம்பினி அகிய மாகாணங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கிழக்கு நேபாளத்தின் பல இடங்களில் நேற்று இரவு முதல் தொடரும் கனமழை மற்றும் இன்று ஏற்பட்ட நிலச்சரிவுகளும் வெள்ள பாதிப்புகளும் மக்கள் உயிரைப் பறித்தன.
நேபாளத்தின் கோஷி மாகாணத்தில் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. அங்கு 37 பேர் உயிரிழந்தனர். பலரைக் காணவில்லை.நேபாளத்தில் ஏ.பி.எப். எனப்படும் ஆயுதக் காவல் படையும் ராணுவமும் காவல்துறையும் சேர்ந்து பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில் அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கத் தயார் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: ‘நேபாளத்தில் கனமழையால் பல உயிர்கள் பறிபோயிருப்பது வேதனையளிக்கிறது. இந்த இக்கட்டான நேரத்தில் நேபாள மக்களுடனும் அந்நாட்டு அரசுடனும் நாம் துணை நிற்கிறோம். நேபாளத்துடன் நட்பு பூண்டுள்ள அண்டை நாடாக, முதலில் உதவும் நாடாக உள்ள இந்தியா, எவ்விதமான உதவிகளையும் வழங்க கடமைப்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.






