வங்காளதேச நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஷேக் ஹசீனாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

வங்காளதேச நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஷேக் ஹசீனாவுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
வங்காளதேச நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஷேக் ஹசீனாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Published on

புதுடெல்லி,

வங்காளதேச நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் மற்றும் முன்னாள் பிரதமரான கலீதா ஜியா தலைமையிலான வங்காளதேச தேசியவாத கட்சி ஆகிய 2 கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டது.

இங்கு மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 299 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இதில், 1,848 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்கு பதிவானது 40 ஆயிரத்து 183 மையங்களில் நடைபெற்றது.

இந்நிலையில், ஹசீனாவின் ஆளும் அவாமி லீக் கூட்டணி, அரசு அமைப்பதற்கு தேவையான 151க்கும் கூடுதலான தொகுதிகளை கைப்பற்றி உள்ளது என உள்ளூர் தொலைக்காட்சியான சேனல் 24 தெரிவித்து உள்ளது.

இந்த தேர்தலில் நள்ளிரவு தகவலின்படி அவாமி லீக் கூட்டணியானது 191 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என தெரிய வந்துள்ளது. இதனால் ஷேக் ஹசீனா 3வது முறையாக தொடர்ந்து ஆட்சி அமைத்திடுவார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற ஹசீனாவுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டுள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஹசீனாவிடம் பேசினேன். தேர்தலில் அவர் பெரும் வெற்றியை பெற்றதற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டேன் என தெரிவித்துள்ளார்.

அவர் பதவி காலம் முழுவதும் சிறப்புடன் பணியாற்ற வாழ்த்தினேன். வங்காளதேசத்தின் வளர்ச்சிக்கு இணைந்து பணியாற்றுவதில் இந்தியா தொடர்ந்து ஈடுபடும். இரு நாட்டு உறவுகளை தொடர்ந்து வலுப்படுத்தும் முயற்சியிலும் இந்தியா ஈடுபடும் என அவரிடம் கூறியுள்ளேன் என்று தெரிவித்து உள்ளார்.

ஹசீனாவுக்கு முதல் தலைவராக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளதற்கு வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது நன்றியை தெரிவித்து கொண்டுள்ளார். இந்த தகவலை இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com