

புதுடெல்லி,
டெல்லியில் நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்த பரிமாற்ற நிகழ்ச்சியில் ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர் அண்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஒன்றிய ஆணைய தலைவர் உர்சுலா வோன் டேர் லேயன் மற்றும் அவர்களுடன் வந்த குழுவினருக்கு டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி விருந்து அளித்தார்.
இந்த விருந்துக்கு இந்தியாவில் உள்ள பத்திரிகை அதிபர்கள் மற்றும் மோட்டார் வாகன தொழிற்சாலைகள், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், ராணுவ தளவாட உற்பத்தி ஆலைகளின் அதிபர்கள் என 14 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
இதில் தமிழ்நாட்டில் இருந்து ‘தினத்தந்தி’ குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், ரானே (மெட்ராஸ்) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கவுரி கைலாசம் ஆகிய 2 பேரை மட்டும் அழைத்து இருந்தனர். இந்த அழைப்பின் பேரில் அவர்கள் விருந்தில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, விருந்தினர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, ‘தினத்தந்தி’ குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தனிடம், சென்னையில் 2017-ம் ஆண்டு நடந்த ‘தினத்தந்தி’யின் 75-வது ஆண்டு பவளவிழாவில் தான் கலந்துகொண்டதை நினைவு கூர்ந்து, மகிழ்ச்சியுடன் பேசினார்.