பிரதமர் மோடி 60 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளார் - அமித்ஷா பேச்சு

ஏழைகளின் நலனில் பிரதமர் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார் என்று அமித்ஷா கூறினார்.
பிரதமர் மோடி 60 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளார் - அமித்ஷா பேச்சு
Published on

அகமதாபாத் ,

கடந்த 2020 ஜூன் மாதம், சாலையோர வியாபாரிகளுக்கு ரூ. 10 ஆயிரம் வரை வட்டியில்லாமல் கடனாக வழங்கும் "ஸ்வநிதி " (SVANidhi Yojana) திட்டம்  மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரங்களுக்கான அமைச்சரவையால் தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின்படி, முதல் முறை பெறும் கடனை அடைத்ததும், வியாபாரிகளுக்கு தொடர்ந்து ரூ.20 ஆயிரமும், அந்த கடனை அடைந்ததும், ரூ. 50 ஆயிரமும் கடனாக வழங்கப்படும். கடன் பெறும் தொகையில் 7 சதவீதம் மானியமாக அரசு வழங்கும்.

இந்தநிலையில், குஜராத் மாநில அகமதாபாத் நகரில், அகமதாபாத் முனிசிபல் கார்பரேஷன் ஏற்பாடு செய்திருந்த இத்திட்டத்தின் பயனாளிகளின் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:

ஆத்ம நிர்பார் பாரத் எனும் சுயசார்புள்ள பாரதத்திற்கான திட்டத்தை பிரதமர் மோடி விளக்கி உள்ளார். இது ஒரு தொலைநோக்குள்ள திட்டம்.

விண்வெளி, ஆராய்ச்சி, மேம்பாடு, பாதுகாப்புத் துறை ஆகியவற்றில் பிரதமர் மோடி அதிக கவனம் செலுத்தி இருக்கிறார். ஏழைகளின் நலனில் அவர் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார். தனது யோசனைகள் மற்றும் திட்டங்கள் மூலம் 60 கோடி மக்களை வறுமையில் இருந்து பிரதமர் மோடி மீட்டுள்ளார்.

வறுமைகோட்டிற்கு கீழே வாழ்பவர்களின் நிலையை மேலே கொண்டு வர பிரதமர் மிகவும் கவனம் செலுத்தி திட்டங்களை வகுக்கிறார். உலகிலேயே கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக ஒரு உள்நாட்டு தடுப்பூசி இந்தியாவில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனா தடுப்பூசி நாட்டு மக்களுக்கு இலவசமாக போடப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com