குருவாயூர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்

நடிகரும், அரசியல்வாதியுமான சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
குருவாயூர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்
Published on

திருவனந்தபுரம்,

கேரளா மாநிலத்திற்கு இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். கேரளாவில் புகழ்பெற்ற குருவாயூரில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்வதற்காக இன்று காலை 7.35 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் குருவாயூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் தரையிறங்கினார். அங்கு அவரை ஏராளமான பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர்.

ஹெலிபேடில் இருந்து, ஸ்ரீவல்சம் விருந்தினர் மாளிகைக்குச் சென்ற பிரதமர் மோடி, பிரார்த்தனை செய்ய கோவிலுக்குச் செல்வதற்கு முன், கேரள பாரம்பரிய உடையை மாற்றிக் கொண்டார். பின்னர் கோவிலுக்கு சென்ற அவரை கோவில் நிர்வாகிகள், அர்ச்சகர்கள் வரவேற்று கோவிலுக்குள் அழைத்து சென்றனர்.

அதன் பிறகு காலை 8.45 மணியளவில் குருவாயூர் கோவிலில் நடந்த முன்னாள் பாரதிய ஜனதா கட்சி எம்.பி.யும் நடிகருமான சுரேஷ்கோபியின் மகள் திருமணத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். பிரதமர் மோடிக்கு நடிகர் சுரேஷ்கோபி தங்க தகடு ஒன்றை பரிசாக வழங்கினார். திருமண நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு குருவாயூர் கோவிலில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, திருப்பாறையாறு ஸ்ரீராம சுவாமி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.

பின்னர் ஹெலிகாப்டர் மூலம் கொச்சிக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு கடற்படைக்கு சொந்தமான சர்வதேச கப்பல் பழுது நீக்கும் மையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கப்பல் மராமத்து உலர் பணியகத்தை தொடங்கி வைக்கிறார். அதன் பிறகு எர்ணாகுளம் அருகே மரைன் டிரைவ் பகுதியில் பாரதிய ஜனதா சார்பில் நடக்கும் சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர் பிரதமர் மோடி டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மற்றும் திருப்பாறையாறு ஸ்ரீராமசுவாமி கோவிலில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com