

புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்ற பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் நேற்று புதிய அரசை அமைத்தது. டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் நரேந்திர மோடி தொடர்ந்து 2-வது முறையாக பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.
கோலாகலமாக நடந்தேறிய இந்த விழாவில் பல்வேறு வெளிநாட்டு தலைவர்கள், உள்நாட்டு அரசியல் தலைவர்கள், மாநில முதல்-மந்திரிகள் என பலர் பங்கேற்றனர். இவர்களை தவிர பெரும் தொழில் அதிபர்கள், நடிகர்-நடிகைகள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என ஏராளமான பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
அந்தவகையில் முகேஷ் அம்பானி தனது மனைவி நீட்டா அம்பானி மற்றும் இளைய மகன் ஆனந்த் ஆகியோருடன் பங்கேற்றார். டாட்டா குழுமத்தை சேர்ந்த ரத்தன் டாட்டா, டாட்டா குழும தலைவர் சந்திரசேகரன், எல்.என்.மிட்டல், அதானி குழும தலைவர் கவுதம் அதானி, தினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், வேதாந்தா நிறுவன தலைவர் அனில் அகர்வால், எச்.டி.எப்.சி.யின் தீபக் பரேக் ஆகியோரும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதைப்போல ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த், பாரதி குழுமத்தின் ராகேஷ் பாரதி மிட்டல், ராஜன் பாரதி மிட்டல், பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க், ஐ.டி. நிறுவன பிரமுகர் நாராயணமூர்த்தி, கல்யாண் ஜூவல்லர்ஸ் நிர்வாக இயக்குனர் கல்யாணராமன் ஐயர் என பலர் பங்கேற்றனர்.
மேலும் நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாகித் கபூர், சித்தார்த் ராய் கபூர், விவேக் ஓபராய், அனுபம்கெர், மதூர் பண்டார்கர், நடிகை கங்கனா ரணாவத், தயாரிப்பாளர் போனி கபூர் போன்ற திரையுலக பிரபலங்களும் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.