

புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தென்னாப்பிரிக்கா சென்றுள்ளார். இந்த நிலையில், கார்கில் போரில் வீரமரணம் அடைந்தோருக்கு அவர் டுவிட்டர் வழியே இன்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், கார்கில் வெற்றி தினத்தினை முன்னிட்டு, ஆபரேசன் விஜயின்பொழுது நாட்டிற்காக சேவை புரிந்த அனைவருக்கும் பெருமை நிறைந்த நாடு தனது அஞ்சலியை செலுத்துகின்றது.
இந்தியாவின் அமைதியை அழிக்க முயன்றவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்ததுடன், நாடு தொடர்ந்து பாதுகாப்புடன் உள்ளது என்பதனை நமது தைரியம் நிறைந்த வீரர்கள் உறுதி செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து, ஆபரேசன் விஜய் நடந்தபொழுது சிறந்த அரசியல் தலைமையை வழங்கிய அடல் பிகாரி வாஜ்பாயை பெருமையுடன் நாடு நினைவுகூர்ந்திடும். அப்பொழுது பிரதமராக இருந்த அவர் முன்னே நின்று நமது ராணுவ வீரர்களுக்கு ஆதரவளித்து, உலக அரங்கில் இந்தியாவின் நிலையை தெளிவுடன் வெளிப்படுத்தினார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.