

புதுடெல்லி,
பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய 5 நாடுகளுக்கு சென்றார்.
இந்த சுற்றுப்பயணம் மூலம், சர்வதேச வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மேலும் வலுப்பெற்றுள்ளது. இந்த நிலையில், ஐந்து நாடுகளுக்கு சென்ற பிரதமர் மோடி, பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி வந்தடைந்தார். அப்போது அவருக்கு மத்திய மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முன்னதாக இந்த பயணத்தில், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருதான ‘ராயல் ஆர்டர் ஆப் போலார் ஸ்டார்’ விருதை வழங்கி கவுரவித்தார் அந்நாட்டின் இளவரசி விக்டோரியா. அதனை தொடர்ந்து பிரதமர் மோடி, ஸ்வீடனின் இளவரசி விக்டோரியாவுக்கு, ஒரு கோண்ட் ஓவியத்தை வழங்கினார். கோண்ட் ஓவியம் என்பது, இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள மிகப்பெரிய பழங்குடி சமூகங்களில் ஒன்றான கோண்டி மக்களால் பயிலப்படும் ஒரு துடிப்பான பழங்குடிக் கலை வடிவமாகும்.
இத்தாலி பயணத்தின்போது, அந்நாட்டு பிரதமரை சந்திக்க சென்ற பிரதமர் மோடி, அவருக்கு இந்தியாவில் இருந்து சாக் லெட் பாக்கெட் ஒன்றை வாங்கி சென்றார். அதன் பெயர் 'மெலோடி' என்பது இரு நாட்டினரிடையே கவனம் பெற்றுள்ளது.
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியும், பிரதமர் மோடியும் நெருங்கிய நட்பு கொண்டவர்கள் ஆவர். இதை அவர்கள் பலமுறை தங்கள் சந்திப்புகளின்போது நிரூபித்து இருக்கின்றனர். இதை தற்போதைய சந்திப்பிலும் வெளிப்படுத்தினர்.
மோடி மற்றும் மெலானி என்ற பெயர்களின் கலவையாக அமைந்துள்ள 'மெலோடி' என்ற பெயர் உலகம் முழுவதும் சமூக வலைத்தளவாசிகளையும் ஈர்த்துள்ளது.
பிரதமர் மோடி தனக்கு அளித்த பரிசுடன் மெலோனி வீடியோ எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில், 'பிரதமர் மோடி எனக்கு ஒரு பரிசாக, ஒரு மிக மிக சிறந்த சாக்லெட்டை கொண்டு வந்துள் ளார். அது 'மெலோடி' என மெலோனி கூறினார். வேடிக்கையாக அவர் கூறியதை கேட்டதும் பிரதமர் மோடியும் சிரித்து விட்டார். 'மெலோடி' என்ற ஹேஷ்டாக் மூலம் அவர் வெளியிட்ட இந்த வீடியோ பதிவு பெரும் வைரலாக பரவியது.