

டேராடூன்,
வட மாநிலங்களில் ஒன்றான உத்தரகாண்டில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
தொடர் கனமழை காரணமாக அணைகளின் நீர்வரத்து அதிகரிப்பால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அங்கு 65 சதவீத சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மழை மற்றும் வெள்ளத்தால் அங்குள்ள பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கவுலான் நதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் முக்கிய பகுதிகளை இணைக்கும் பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது. வெள்ளம் காரணமாக முன்கூட்டியே பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் தங்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.