

புதுடெல்லி,
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பின் பேரில், 2021 ஏப்ரல் 22 மற்றும் 23 தேதிகளில் காணொலி காட்சி மூலம் நடைபெறும் பருவநிலை குறித்த தலைவர்களின் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
''2030 ஆம் ஆண்டுக்கு நமது ஒட்டுமொத்த வேகம்'' என்ற தலைப்பில் இன்று மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடைபெறும் தலைவர்களின் முதல் கூட்டத்தில் கலந்துக் கொண்டு பிரதமர் மோடி கருத்துக்களை தெரிவிக்க உள்ளார்.
இந்த உச்சிமாநாட்டில், சுமார் 40 நாடுகளின் உலக தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
பருவநிலை மாற்றம், பருவநிலை மாற்ற தடுப்பு நடவடிக்கைகளை அதிரிப்பது, பருவநிலை தணிப்பு நடவடிக்கைகளுக்கான நிதி திரட்டுவது, இயற்கை அடிப்படையிலான தீர்வுகள், பருவநிலை பாதுகாப்பு மற்றும் சுத்தமான எரிசக்திக்கான தொழில்நுட்ப கண்டுபிடிப்பு குறித்த கருத்துக்களை தலைவர்கள் இந்த உச்சி மாநாட்டில் பகிர்ந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய சூழ்நிலைகள் மற்றும் நிலையான வளர்ச்சி முன்னுரிமைகள் ஆகியவற்றை மதிக்கும் அதே வேளையில், உலகமானது எவ்வாறு பருவநிலை நடவடிக்கையை உள்ளடக்கிய மற்றும் பொருளாதார வளர்ச்சியுடன் சீரமைப்பது என்பது குறித்தும் தலைவர்கள் ஆலோசிப்பர்.
2021 நவம்பரில் நடைபெறும் பருவநிலை விஷயங்கள் குறித்து நடைபெறும் உலகளாவிய கூட்டங்களின் ஒரு பகுதியாகத்தான் இந்த உச்சிமாநாடு.
இதன் அனைத்து கூட்டங்களும் நேரடியாக ஒளிபரப்பப்படும், மற்றும் ஊடகங்கள் பங்கேற்கும் பொதுவான கூட்டமாக இருக்கும்.