

புதுடெல்லி,
இந்தியாவில் தினமும் 10 ஆயிரத்துக்கு கீழே பாதிப்பு ஏற்பட்டு கொரோனா 2-வது அலை இறுதிக்கட்டத்தை அடைந்து வந்த நேரத்தில், அழையா விருந்தாளியாக இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் நுழைந்தது. அதைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் மறுபடியும் காட்டுத்தீயாக பரவத் தொடங்கி இருக்கிறது.
இதன் காரணமாக தினமும் 1 லட்சத்துக்கு அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி வருகிறது. பரவலைக்கட்டுப்படுத்த நாட்டில் பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை, ஊரடங்குகளை அறிவித்து வருகின்றன. தமிழகத்திலும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுக்க கொரோனா பரவல் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். மாலை 4.30 மணியளவில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.