உலகின் உயரமான ரெயில்வே பாலம்; பிரதமர் மோடி திறந்து வைத்தார்

பிரதமர் மோடி இன்று (வெள்ளிக்கிழமை) ஜம்மு காஷ்மீர் சென்றார்.. அங்கு உலகின் உயரமான ரெயில்வே பாலத்தை திறந்து வைத்தார்.
Published on

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு 2 நாட்கள் முன்னதாக பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் செல்வதாக இருந்தது. ஆனால் அந்த திட்டம் அப்போது கைவிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைதி திரும்பி உள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி அங்கு செல்ல பயணத்திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. இதன்படி பிரதமர் மோடி இன்று அங்கு சென்றார். 

ஜம்மு காஷ்மீரில் செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் ஒரு வளைவான பாலம் ரெயில்வேயால் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இரும்பால் கட்டப்பட்ட இந்த பாலம் 1,315 மீட்டர் நீளம் கொண்டது. இது உலகின் மிக உயரமான ரெயில்வே பாலம் ஆகும். நில அதிர்வு மற்றும் பலத்த காற்று சூழலை தாங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையேயான போக்குவரத்தை மேம்படுத்துவதில் இப்பாலம் முக்கியப் பங்கு வகிக்கும். இந்த பாலத்தில் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த பாலத்தை காலை 11 மணிக்கு பிரதமர் மோடி திறந்து வைத்து பார்வையிட்டார். 

இதனைத்தொடர்ந்து கம்பி வழி ரெயில் பாலமான அஞ்சி பாலத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர் பகல் 12 மணியளவில் ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி கோவில் அமைந்துள்ள கத்ராவில் இருந்து ஸ்ரீநகர் வரை இயக்கப்படும் 2 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையையும் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து, கத்ராவில் ரூ.46 ஆயிரம் கோடிக்கும் மேலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் அவர், அங்கு ஏற்கனவே நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்த்தார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com