வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பிரதமர் மோடி விரைவில் ஆய்வு - வெளியான தகவல்

கோப்புப்படம்
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு சென்று நிலைமையை பிரதமர் மோடி ஆய்வு செய்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,
தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததுள்ள காரணத்தால் வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தலைநகர் டெல்லி, பஞ்சாப், உத்தர பிரதேசம், ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.
கனமழை காரணமாக டெல்லியில் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அங்கு மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் யமுனை ஆற்றில் நீர்மட்டம் அபாய அளவை தாண்டி உயர்ந்துள்ளது. இது கடந்த 60 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதற்கு முன் 1963ஆம் ஆண்டு 207 அடிக்கு உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் கரையோர பகுதியில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். மேலும் 12 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளார்கள். இதற்காக, 25 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களை தேசிய பேரிடர் அணியினர் மீட்டு வருகின்றனர். இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு 40 முக்கிய ரெயில்கள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்த பாதிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு கடும் அவதிக்கு ஆளாகி உள்ளன.
இதே போல், ஜம்மு காஷ்மீரில் செனாப் நதியிலும் அபாய கட்டத்தைத் தாண்டி வெள்ளம் அதிகரித்ததால் அது மக்கள் வசிக்கும் பகுதியில் சென்று சூழ்ந்துள்ளது. அங்கு அக்னூர் பகுதியில் சிக்கி தவித்த 44 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உத்தர பிரதேசத்தில் உள்ள பெரோஸ்பூர் பகுதியில் ஒரு கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு படகுகள்மூலம் நிவாரணப் பொருட்கள் கொடுக்கப்பட்டது.
அதே போல் பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்பு பணியாளர்கள் சென்றடைய முடியாத நிலை நீடிக்கிறது, இதனால் டிரோன்கள் மூலம் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த கனமழை பாதிப்பால் உயிர் சேதங்களும் நடந்துள்ளது. இமாச்சல பிரதேசத்தில் இதுவரை இல்லாத அளவு இந்த வெள்ளத்தால் மாநிலத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு சென்று, அங்குள்ள நிலைமையை பிரதமர் மோடி விரைவில் ஆய்வு செய்ய உள்ளதாக இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.






