பிரதமர் மோடி நாளை மத்திய பிரதேசத்திற்கு பயணம்

ஆனந்த்பூர் தம், 500 பசுக்களுடன் நவீன கோசாலையை கொண்டு, 315 ஹெக்டேர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது.
போபால்,
பிரதமர் மோடி மத்திய பிரதேசத்தின் அசோக் நகர் மாவட்டத்தில் இசாகார் தாலுகாவுக்கு உட்பட்ட ஆனந்த்பூர் கிராமத்தில் உள்ள ஆனந்த்பூர் தம் பகுதிக்கு நாளை பயணம் மேற்கொள்கிறார். இதன்பின்னர் பிற்பகல் 3.15 மணியளவில் இசாகார் பகுதிக்கு உட்பட்ட குருஜி மகாராஜ் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டு பூஜைகள் செய்வார். பொது கூட்டம் ஒன்றிலும் பங்கேற்கிறார்.
ஆனந்த்பூர் தம், ஆன்மீகம் மற்றும் பரோபகார நோக்கங்களுக்காக நிறுவப்பட்டு உள்ளது. 500 பசுக்களுடன் நவீன கோசாலையை கொண்டு, 315 ஹெக்டேர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது. அறக்கட்டளையின் கீழ் வேளாண் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த அறக்கட்டளையானது, நாடு முழுவதம் சத்சங் மையங்களையும், சுக்பூர் கிராமத்தில் மருத்துவமனையையும், சுக்பூர் மற்றும் ஆனந்த்பூர் பகுதிகளில் பள்ளிகளையும் நடத்தி வருகிறது.
இந்த ஆண்டில் மத்திய பிரதேசத்திற்கு பிரதமர் மோடி மேற்கொள்ளும் 2-வது பயணம் இதுவாகும். இதற்கு முன்பு, கடந்த பிப்ரவரி 23-ந்தேதி சத்தர்பூர் மாவட்டத்தில் பாகேஷ்வர் தம் பகுதிக்கு வருகை தந்த அவர், அடுத்த நாள் தலைநகர் போபாலில் நடந்த உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.






