‘வாக்குகள் கிடைக்கும் என்றால் மட்டுமே கோவில்களைப் பற்றி பிரதமர் மோடி பேசுவார்’ - ராகுல் காந்தி விமர்சனம்

பா.ஜ.க.வும், இடதுசாரி ஜனநாயக முன்னணியும் இணைந்து செயல்படுவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
‘வாக்குகள் கிடைக்கும் என்றால் மட்டுமே கோவில்களைப் பற்றி பிரதமர் மோடி பேசுவார்’ - ராகுல் காந்தி விமர்சனம்
Published on

திருவனந்தபுரம்,

பிரதமர் மோடி நேற்று கேரள மாநிலம் பாலக்காடு மற்றும் திருச்சூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். இந்நிலையில், மோடி தனது பிரசாரத்தின்போது சபரிமலையில் நடந்த முறைகேடுகள் குறித்து எதுவும் பேசவில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பட்டணம்திட்டாவில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது;-

“பிரதமர் மோடி சபரிமலை பற்றி பேச மறந்துவிட்டார். அய்யப்பன் கோயில் தொடர்பான பிரச்சினைகளை அவர் குறிப்பிடவில்லை. இது பா.ஜ.க.வும், இடதுசாரி ஜனநாயக முன்னணியும் இணைந்து செயல்படுவதைக் காட்டுகிறது.

தேர்தல் நலன்களுக்கு சாதகமாக இருக்கும்போது மட்டுமே பிரதமர் மதப் பிரச்சினைகளை எழுப்புகிறார். அவரைப் பொறுத்தவரை, வாக்குகள் கிடைக்கும் என்றால் மட்டுமே கோவில்களைப் பற்றி பேசுவார். இல்லையெனில் அவர் மௌனமாக இருந்துவிடுவார்.

கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வரும்போது, ​​சபரிமலை கோவில் தொடர்பான முறைகேடுகளுக்குப் பொறுப்பானவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

பா.ஜ.க.வின் முழு ஆதரவு பெற்ற இடது ஜனநாயக முன்னணிக்கு எதிராக நாங்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம். ஒருபுறம் ஐக்கிய ஜனநாயக முன்னணியும்(UDF), மறுபுறம் சி.பி.ஐ(எம்)-பா.ஜ.க. கூட்டணியும் உள்ளன.

தேசிய அளவில் தங்களுக்கு சவால் விடும் ஒரே சக்தி காங்கிரஸ்தான் என்பது பா.ஜ.க.வுக்குத் தெரியும் என்பதால், ஐக்கிய ஜனநாயக முன்னணி இங்கு இருப்பதை அவர்கள் விரும்பவில்லை. பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். உடன் எங்களுக்கு சித்தாந்த ரீதியான போராட்டம் உள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது மத்திய அமைப்புகள் நடவடிக்கை எடுக்கும் நிலையில், கேரளாவில் உள்ள இடதுசாரி ஜனநாயக முன்னணி(LDF) தலைவர்கள் மீது அத்தகைய அழுத்தம் எதுவும் பிரயோகிக்கப்படவில்லை.

நான் 36 வழக்குகளைச் சந்தித்துள்ளேன், மேலும் 55 மணி நேரம் தொடர்ச்சியாக விசாரிக்கப்பட்டேன். ஆனால், கேரள முதல்-மந்திரி மீதோ அல்லது இடதுசாரி ஜனநாயக முன்னணி தலைவர்கள் மீதோ அத்தகைய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com