8 ஆண்டுகளாக தூங்கிய பிரதமர் மோடி அரசு... மகளிர் இட ஒதுக்கீடு மசோதா விவகாரத்தில் கடுமையாக சாடிய காங்கிரஸ்

எங்களுடைய கட்சியின் மூத்த தலைவர்கள் கடந்த காலத்தில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாக அமல்படுத்தும்படி, தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர்.
8 ஆண்டுகளாக தூங்கிய பிரதமர் மோடி அரசு... மகளிர் இட ஒதுக்கீடு மசோதா விவகாரத்தில் கடுமையாக சாடிய காங்கிரஸ்
Published on

புதுடெல்லி

நாடாளுமன்றத்தில் கடந்த 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை 3 நாட்கள் நடந்த சிறப்பு கூட்டத்தொடரில் அரசியல் சாசன (131-வது சீர்திருத்த) மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் தற்போதுள்ள தொகுதிகளின் எண்ணிக்கையை 543-ல் இருந்து 816 ஆக அதிகரிக்கும் நோக்கில், 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், வருங்கால தொகுதி மறுவரையறையையும் இணைத்து, அமல்படுத்தும் நடவடிக்கையாக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த மசோதா நிறைவேற தேவையான 3-ல் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற தவறியது. 298 வாக்குகள் ஆதரவாகவும், 230 வாக்குகள் எதிர்ப்பாகவும் பதிவாகி இருந்தது. இதனால் மசோதா தோல்வியடைந்தது. இதனை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உறுதி செய்துள்ளார். மசோதா தோல்வியடைய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவிக்காததே காரணம் என ஆளும் பா.ஜ.க. கூறியது.

இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் இன்று வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், எங்களுடைய கட்சியின் மூத்த தலைவர்கள் கடந்த காலத்தில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாக அமல்படுத்தும்படி, தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர்.

2018-ம் ஆண்டு ஜூலை 16-ல், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாக அமல்படுத்தும்படி பிரதமர் மோடிக்கு, அப்போது, காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி கடிதம் எழுதினார். ஆனால் 8 ஆண்டுகள் கழித்து, பிரதமர் மோடி, தொகுதி மறுவரையறையுடன் அதனை இணைத்து இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் இன்னும் காலதாமதம் ஏற்படுத்தி கொண்டிருக்கிறார். இந்த கோரிக்கையை இன்னும் செயல்படுத்தவில்லை என பதிவிட்டு உள்ளார்.

இதேபோன்று, 2017-ம் ஆண்டு, அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தி கூட, பிரதமர் மோடிக்கு, அந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றும்படி கடிதம் எழுதினார். காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு மாற்றமில்லாதது. இந்த கோரிக்கை விசயத்தில் மோடி அரசு தூங்கி விட்டு, அதனை தொகுதி மறுவரையறையுடன் இணைத்து தாமதப்படுத்த முயற்சித்து கொண்டிருக்கிறது என பதிவிட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com