

புதுடெல்லி,
டெல்லியில் இருந்து உத்தர பிரதேசத்தின் மீரட் நகரை சென்றடைவதற்காக இந்தியாவின் முதல் ஸ்மார்ட் மற்றும் பசுமை நெடுஞ்சாலையை அமைக்க அரசு முடிவு செய்தது. இதற்காக ரூ.11 ஆயிரம் கோடி மதிப்பில் திட்ட பணிகள் நடந்தன. இதனை தொடர்ந்து 500 நாட்களில் இந்த நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது.
டெல்லியில் இருந்து மீரட் நகருக்கு 45 நிமிடங்களில் இந்த சாலை வழியே சென்றடையலாம். இதனால் 4 மணிநேர பயணம் என்பது தவிர்க்கப்படும். இந்த கிழக்கு பெரிபரல் விரைவு சாலையானது கண்ட்லி நகரை இணைக்கும். சோன்பட், பாக்பட், காஜியாபாத், நொய்டா, பரீதாபாத் ஆகிய நகரங்களையும் இது இணைக்கிறது.
135 கி.மீ. நெடுஞ்சாலையில் சூரிய மின்சக்தியில் இயங்கும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு 500 மீட்டர் தூரத்திற்கும் மழைநீர் சேமிப்பு வசதி உள்ளது. வாகனங்களின் வேகத்தினை கண்டறிய சிறப்பு கேமிரா கொண்டு கண்காணித்து அபராதம் விதிக்கும் வசதியும் உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நிதின் கட்காரியும் கலந்து கொண்டார். நெடுஞ்சாலை திட்டத்தினை தொடங்கி வைத்தபின் பிரதமர் மோடி திறந்த நிலையிலான காரில் 6 கி.மீ. தூரம் வரை நின்றபடி பயணம் செய்துள்ளார்.