மீட்புப் பணியின் வெற்றி, அனைவரையும் உணர்ச்சி வசப்பட வைக்கிறது - பிரதமர் மோடி வாழ்த்து

பல்வேறு சவால்களை கடந்து தொழிலாளர்களை வெற்றிகரமாக மீட்டுள்ள மீட்புக்குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
மீட்புப் பணியின் வெற்றி, அனைவரையும் உணர்ச்சி வசப்பட வைக்கிறது - பிரதமர் மோடி வாழ்த்து
Published on

புதுடெல்லி,

17 நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு உத்தரகாசி சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

சுரங்க விபத்தில் சிக்கி இருந்த தொழிலாளர்களை தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஒருவர் பின் ஒருவராக மீட்டனர். சுரங்கத்தில் இருந்து ஒருவரை மீட்க 2 முதல் 3 நிமிடங்கள் வரை ஆவதாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களை உத்தரகண்ட் முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி, மத்திய மந்திரிவி.கே.சிங் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் உடனடியாக சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சுரங்கத்தில் இருந்து தொழிலாளர்கள் மீட்கப்பட்டதை அறிந்ததும் அவர்களது உறவினர்கள் கைத்தட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். பல்வேறு சவால்களை கடந்து தொழிலாளர்களை வெற்றிகரமாக மீட்டுள்ள மீட்புக்குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்தநிலையில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

உத்தரகாண்ட் சுரங்கத்தில் மீட்கப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். மீட்புப் பணியின் வெற்றி, அனைவரையும் உணர்ச்சி வசப்பட வைக்கிறது. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை சந்திக்கிறார்கள். சுரங்கப்பாதையில் சிக்கிய நண்பர்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன், உங்கள் தைரியமும் பொறுமையும் அனைவரையும் ஊக்குவிக்கிறது. நீங்கள் அனைவரும் நலமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வாழ்த்துகிறேன்.தொழிலாளர்களின் குடும்பங்கள் காண்பித்த பொறுமையும், தைரியமும் மிகவும் பாராட்டத்தக்கது. சுரங்கத்தில் இருந்து தொழிலாளர்களை மீட்க அயராது உழைத்த மீட்புக்குழுவினருக்கு பாராட்டுகள் எனக்கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com